Saturday, April 16, 2011

நாயகன்


வயது நூறுக்குமேல் ஆனாலும் உன் இளமை இன்னும் குறையவில்லை
இந்த மண்ணைவிட்டு நீ மறைந்ததாக பலரும் சொன்னாலும்
உன் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை
என் அப்பன் உன்னைகாட்டி என்னுடன் சிரித்தான்
நான் உன்னைகாட்டி என் மகனுடன் சிரித்தேன்
நாளை அவனும் அவன் பிள்ளையும்.........
என்று தணியும் உன்மேல் எங்கள் தீரா தாகம்
கற்பனைக்கும் எட்டாத விஞ்ஞான வளர்ச்சி
பிரம்மிப்பூட்டும் சாகசங்கள் விதவிதமாக நட்சத்திரங்கள்
எத்தனைதான் திரையில் தோன்றி வியப்பூட்டினாலும்
அந்த கந்தலாடை பரதேசிக்கு இணையாகுமா?
நீ ஏழைகளின் வாழ்க்கையை சொன்னாய்
கசக்கும் உண்மையை, ஏழ்மையை, அதன் வலியை
நகைசுவை தடவி தந்தாய்.
சிறியவயதில் சிரித்த நான் இன்று பிரம்மித்து நிற்கிறேன்
நீ பாமரர்களின் நாயகன்
உலகாண்ட கொடுங்கோலனும் உன் படம் பார்த்து அஞ்சினானாம்
நீ கம்யூனிஸ்டோவென்று வல்லரசும் அஞ்சியதாமே
வலிய ஆயுதங்கள் செய்ய முடியாததை உன் உடைந்த
கை தடி செய்து விட்டதா?
இன்றும் உன் வீரியம் குறைந்து விடவில்லை.
உன்னை அரைகுறையாக காப்பியடித்தவர்களெல்லாம்
எங்களூர் உச்சநட்சத்திரங்கள்
பேசா உன் திரைபடங்கள் பேசிய இன்மொழிகளை
இன்று செவிபறை கிழிய கத்தும் எந்த படமும் தரவில்லை
என்றும் வாழும் எம் நாயகனே
இந்த பாலைவனத்தில் நீதான் எம் சோலை.





Friday, April 15, 2011

வலியா?

ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டேன்
தீயிலிட்டு எரித்து சாம்பலை காற்றில் கரைத்துவிட்டேன்
பால்வெளியில் என்றோ பூமிக்கு அருகில் வரும்
வால்நட்சத்திரத்துடன் கட்டி அனுப்பிவிட்டேன்
என்றுமே திரும்பாத கடந்த காலத்துடன்
உறையவிட்டு நிறுத்திவிட்டேன்
ஆயினும்
இனிய நாதத்திற்கு இடையே கை தவறிபட்ட கட்டையால்
எழும்பும் ஒரு அபஸ்வர ஆனால் ஒரு இனிய ஒலிபோல்
கடும்கூட்டத்தினூடே ஒரு குழந்தையின் புன்சிரிப்புபோல்
ஆழ்ந்த அதிகாலை தூக்கத்தினூடெ வரும் ஒரு கனவு போல்
காரணத்தினுடனோ காரணமற்றோ அந்த நினைவுவரும்போது
அடி வயிற்றில் சுரீரென்று ஏதோ ஒன்று பரவுகிறதே
அது என்ன வலியா?  இல்லை உணர்வா?
 (மறப்பது கடினம்தான் அது தவறான பழக்கமாக இருந்தாலும்___ சிகெரெட் )